tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மேலாண்மை பொன்னுச்சாமி நினைவுநாள்...

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுச்சாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் எழுதத் தொடங்கினார்.மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார்.இவரது கதைகள்பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகின.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர் அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான்.கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு, தமிழ் அரசி சிறுகதை போட்டியில் முதல் பரிசு, ஆனந்த விகடன் பவழ விழா ஆண்டில் முத்திரைபரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றார்.2007ல் சாகித்திய அகாதமி விருது, ‘மானாவாரிப் பூ’ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது, வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் “மாட்சிமைப்பரிசு” என்ற கேடயம். உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.
‘சிபிகள்’ தொகுப்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது. ‘பாட்டையா’ சிறுகதை பன்னிரெண்டாடம் வகுப்பு பாடமாக இடம்பெற்றது.இவரது படைப்புகளை ஆய்வு செய்து 10க்கும் மேற்பட்டோர் எம்.பில் பட்டமும், நான்கு பேர் பி.எச்டி பட்டமும் பெற்றது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2017 அக்டோபர் 30 அன்று சென்னையில் காலமானார்.

===- பெரணமல்லூர் சேகரன்===